Saturday 30 October 2010

தவறவிட்ட திரைப்பட விழா வாய்ப்பு

சென்னை ஃபில்ம் சேம்பரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேச திரைப்பட விழா சமயத்தில் என் வாய்ப்பு பறிபோன கதை வேறுதளத்தைப் பற்றியது.இந்த தளம் இடம் என்ற அர்த்தத்திற்குரியது.சென்னையைப் பிரிந்து இருப்பதால் அங்கு நடைபெறும் விழாவில் கலந்து கொள்வது இயலாமையாகிப் போனது.மறதியும் சோம்பேறித்தனமும் குறுகிய வட்டமுமே இந்த வாய்ப்பைத் தவறவிடக் காரணம்.இந்த கட்டேற்றம் கத்தார் தோஹாவில் இன்றோடு நடந்துமுடிந்த சர்வதேசத் திரைப்பட விழாவைப்(Doha Tribeca Film Festival) பற்றிய மையம் கொண்டது.

இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு நண்பரின் வழக்கமாய் திருப்பிவிடும் சுபாவ இமெயில் மூலம் இதுபற்றி அறிந்தேன்.பிறகு அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் விவரங்கள் தேடியதில் அவர்களுக்கு சேவைப்பணிக்கு விண்ணப்பிக்க ஆட்களும் தேவை என்பது தெரிந்தது.இதிலெல்லாம் கலந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இதுவரை பெரியதாய் இல்லாமல் தான் இருந்தது.ஆனால் சில நண்பர்களின் பரிந்துரைகளினாலும்,சாரு நிவேதிதா,எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் என் மனத்தில் உண்டாக்கிய தாக்கத்தினாலும் சர்வதேசத் திரைப்படங்கள் என்னுள் ஒரு உந்துதலை உண்டாக்கி இருந்தது.

திரையிடப்போகும் படங்களின் பட்டியலை அப்போதைய சமயத்தில் பார்த்தபின் ஒரே அரபியத் திரையிடல்கள் வாசம் என்னை பயமுறுத்தியது.அதனால் விண்ணப்பிக்க தயங்கி பின்வாங்கிவிட்டேன்.விண்ணப்பித்து இருந்தாலும் கிடைத்திருக்குமா என்பது வேறு விஷயம்.விண்ணப்பித்த ஆயிரமவர்களில் ஒரு நூறுபேரை மட்டுமே தேர்வு செய்த்ததும்,அதில் பெரும்பான்மையானவர்கள் அரபிக் பேசுபவர்கள் என்பதும் காலம் கடந்தபின் வந்துசேர்ந்த புரிதல்.அதோடு இந்த விழாவைப் பற்றி மறந்துவிட்டேன்.

இன்றுதான் இவ்விழாவினைப் பற்றிய தொடர்விவரங்கள் கிடைக்க,வாய்ப்பு தவறவிட்டதன் உணர்வு உறுத்தியது.கென்ஸ் விழாவில் கலந்து கொண்ட பல சர்வதேசத் திரைப்படங்களும் கடைசிநேர வரிசையில் சேர்ந்து கொண்டன.அவற்றில் முக்கிய படங்களாய் என் புரிதலுக்கானவை:

பிரேவ் ஹார்ட், பேர்ல் ஹார்பர் படங்களின் திரைக்கதாசிரியர் ரேண்டல் வாலஸ்ஸின் “Secretariat"

கேன்ஸில் சிறந்த இயக்குநர் விருது பெற்ற ஜூலியன் ஸ்சென்பெலின் "Miral" - இதில் ப்ரைய்டா பிண்டோ ஸ்லம்டாக் மில்லினர் நாயகி நாயகியாக நடித்தது.

வேர்ல்ட் பனோரமா குழுவில் இடம்பெற்ற ஒரே இந்தியத் திரைப்படமான “Udaan” உதான் - விக்ரமாதித்ய மோத்வனெ இயக்கத்திலும், மற்றும் அனுராக் கேஸ்யாப்பின் திரைக்கதையிலும் வந்த படம்.

1945 க்கும் 1962 க்கும் இடைப்பட்ட காலங்களில் அல்ஜீரியாவில் நடந்த கொடும்கொலைகளில் தப்பித்து பிரான்ஸில் தஞ்சம் புகுந்த மூன்று சகோதரர்களின் கதையமைப்பைக் கொண்ட ''Outside the Law"

மற்றும் கென்ய கிராமத்தின் 84 வயது விவசாயியின் முதியோர் கல்வி ஆசை பற்றிய   "The First Grader" படங்கள்.

இந்த விழாவில் ராம்கோபால் வர்மாவின் ரக்த சரித்ராவும் சிறப்புத் திரையிடலாக திரையிடப்பட்டது.விழாவில் ஒருநாள் பேமிலி டேயாக அறிவித்து இலவசமாய் இரண்டு நல்லபடங்களையும் அழகான திறந்தவெளி அரங்கில் காண்பித்தார்கள் என்பது நண்பரின் மூலம் கடைசியாக வந்த தகவல்.மீரா நாயர்,ப்ரைய்டா பின்டோ,சல்மா ஹெயக் மற்றும் மல்லிகா ஷெராவத் ஆகியோரும் கலந்து கொண்டார்களாம்.இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் நான் தவறவிட்டதாய் சொன்ன வாய்ப்பு.அடுத்த வருடத்தில் வாய்ப்பு கிடைத்தால் தவறவிடக்கூடாது என்று எங்கோ எழுதின ஞாபகம்(இங்கே தான்.. வேற எங்கேயும் எழுதறதில்லை).தோஹா நண்பர்கள் கூட்டு சேரலாம்.அதுவரை என்ன பண்றது..இந்த படங்களை  சில பல உபயங்களின் மூலம் முடிந்தால் பார்த்துவிட்டு பதிவிட வேண்டியது தான்..

நன்றி: DTFF - http://www.dohafilminstitute.com/

செந்தில்குமார்.

1 comment:

கானகம் said...

இந்தமாதிரி வாய்ப்பெல்லாம் நம்மூரில் பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கும். வெளிநாட்டில்தான் போட்டிகள் குறைவு. எளிதில் பார்க்கலாம். அடுத்த முறை நீங்களும் கலந்துகொண்டு என்னையும் அழைத்துச் செல்லுங்கள். :-)