Wednesday 20 October 2010

என் மழலையின் முதல் கவிதை

கவிதைகள் எழுதும் பெரிய முனைப்பு எதுவும் இல்லாததால் அதுபற்றி மண்டையை உசுப்பவில்லை.சில சமயங்களில் கவிதைகள் நாம் எதிர்பார்த்திரா வகைகளில் நிகழ்ந்துவிடுகின்றன.சின்னவயசில் கவிதை எனும் பெயரில் கிறுக்கியதுண்டு.அதை விட முக்கியமாய் அவை நன்றாக இருப்பதாய் நினைத்து பாதுகாப்பாய் எழுதியும் வைத்ததுண்டு.

எ.கா.:       பாடம் நடத்திடும் குருவை சில
                   பதர்கள் அழைப்பதோ அறுவை

இது அப்பட்டமான ஒரு நகலாகக்கூட இருக்கலாம்.பத்தாம் வகுப்பு வாக்கில் கிறுக்கியதாய் நினைவு.ஆனால் அவைகள் முக்கிய நண்பர்கள் தளத்தில் எள்ளி நகையாடி கேலி பேசப்பட்டதால் அதோடு பரணில் ஏறியது.அதன்பின் சில பல நல்ல கவிதைகள் மேலோட்டமாயும் நுண்மையாயும் வாசித்த அனுபவம் உண்டு.சில நறுக்கென்றும் பல மொக்கையாயும் இருக்கும்.நீளம் காரணமாய் முழுதும் படிக்க இயலாமல் போகும்.தமிழில் கவிதை எழுதும் கவிகள் அதிகம் என்பது உண்மையென்றாலும் அதில் எத்தனை உயிரோட்டமாய் இருக்கின்றன என்பதே தெளிவான நிதர்சனம்.சில உண்மையில் முழுதாய் புரிவதில்லை.ஒருவேளை புரிந்துவிட்டால் அவை நல்ல கவிதை இல்லையோ அல்லது என் புரிதல் நிலை அவ்வளவு தானோ என்னவோ.புரியாத சமயத்தில் அதற்கான விளக்கம் அறிதலை நோக்கி நண்பர்களிடத்தில் கேள்வி எழுப்ப நினைத்தாலும் ஏதோ ஒன்று தடுத்துவிடும்.

பள்ளிப்பருவத்தில் தமிழ் மன்றத்தின் கட்டாயத்தால் எழுதிப் பழக வேண்டிய நிலை.அவை அந்நேரங்களில் தமிழாசிரியரின் நகைப்பிற்கும் சகமாணவர்களின் பாராட்டுக்கும் கூட ( ரொம்ப முக்கியம்..) ஆட்பட நேர்ந்ததுண்டு.ஒரு நண்பன் எப்போதும் சட்டைப்பை குறிப்பேட்டில் மனதில் உதித்த தருணத்தில் குறிப்பெழுதி கக்கிவிடுவதை கவனித்திருக்கிறேன்.

திரு.சுஜாதா அவர்களின் சுட்டிக்காட்டலின் மூலம் பல ஹைக்கூக்களும்,நல்ல கவிதைகளின் வாசிப்பிற்கும் அறிமுகம் கிடைத்தது.பிடித்தவர்களின் சுட்டிக்காட்டல் பிடிக்கும் என்பதில் வியப்பேதுமில்லை அல்லவா?

சென்னையில் எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது கவிதை என்ற பெயரில் பாதுகாப்பு (அவ்வளவு தானா உங்கள் லட்சணம் என்ற முணுமுணுப்பு எங்கிருந்தோ..)குறித்த சில வரிகள் எழுதி இரண்டாம் பரிசும் கிடைத்திருக்கிறது.இன்னபிற காரணங்களால் நல்ல கவிதை அத்தனை சுலபமானதில்லை என்ற முடிவுக்கு வந்து வெகுநாளாகிவிட்டது.அதனால் அதுபற்றிய முனைப்பு இல்லாமல் போய்விட்டது,வாசிப்போடு சரி.

வலைதளத்தில் பதிவிட வந்ததால் கவிதை எழுதும் எண்ணமும் இதுவரை இல்லை.ஆனால் எதேட்சையாய் என் பிள்ளைகளிடம் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சாதாரண தருணத்தில் என் நாலரை வயது மகன் என்னை எதிர்நோக்கி எழுப்பிய கேள்வியே ஒரு கவிதையாய் பட்டது எனக்கு,உங்களுக்குமா.? என்பதை கடைசியில் உள்ள கவிதையை (என் கணிப்பு) படித்துவிட்டு சொல்லுங்கள்.

நிலாவையும்,மழையையும் முன்னிறுத்தி காலம் காலமாய் பல்லாயிரக்கணக்கான கவிதைகள் நம்மிடையே வலம் வந்தாலும் சலிப்பேற்றுவதில்லை.மழையோ அதற்கான அறிகுறிக்கோ இயற்கையே எந்த பெரிய முனைப்பை காட்டாத வளைகுடா மணற்பரப்பில் அதிசயமாய் சிறுதூறலுடன் மென்மையான வானவில்லோடு காட்சியளித்த கவிமயமான தருணத்தில் என் வீட்டு மழலையின் பார்வையில் மனத்தில் ஜனித்ததை நான் பதியும் இதுவும் மழையைப் பற்றியதே.முழுதாய் எந்த பூச்சும் இல்லாமல் தந்திருக்கிறேன்.

மழை  ஏன் வந்திருக்கிறது தெரியுமா
அழுக்காய் இருக்கிற நமது காரை கழுவிவிட..      


செந்தில்

No comments: