Wednesday 13 October 2010

எங்கே விளையாட்டு பசங்க.?

எப்ப பார்த்தாலும் விளையாட்டு தான்.படிக்கணும்கிற எண்ணமெல்லாம் கொஞ்சம் கூட இல்லை,நிக்கியை பாரு,தாரகேஷைப் பாரு (இன்னும் பல குழந்தைகளின் பெயர் சொல்லி.,பெயர்களை மறந்துவிட்டேன்) எப்படி படிக்கறாங்க என்ற இசைப்பாட்டு சமையல் அறையில் இருந்து என் வீட்டு மழலைகளை வந்து அடைந்தது.சில சமயங்களில் என்னை நோக்கியும்
வருவதுண்டு.நாங்களும் படிப்போம்ல எப்பவாவது (முதியோர்க்கானது அல்ல).


சிறுவயதில் தோன்றும் விளையாட்டுத்தனங்களையும் அதன் மீதுள்ள ஈர்ப்பையும் பருவம் தாண்டியும் கொண்டு செல்லும் முனைப்பும்,வாய்ப்பும் வெகுசிலருக்குத் தான் வாய்க்கிறது.ஒரு கோடை விடுமுறையில் ஒரு பகல்பொழுது முழுதும் விளையாடித் தீர்த்து வீடு வந்து சேர்ந்தபொழுது வூடு கட்டி என் அம்மா அடித்தது ஏனோ இப்போது நினைவில் வருகிறது.இந்த தலைமுறையிலும் அதே நிகழ்ந்திடவும் வாய்ப்புள்ளது.விளையாட்டை முழுநேர ஈடுபாடாய் கொண்டோர் இந்தியாவில் வெகுசிலர் மட்டுமே.மேல்தட்டு வர்க்கம் தான் அதிலும் ஆதிக்கம் செலுத்துகிறது.மத்திய மற்றும் அடித்தட்டு மக்களுக்கு இன்னும் எட்டா பழமே.கிரிக்கெட்டும் அதன் புகழும்,பணமும்  தான் அதற்கான முன்னேற்ப்பாட்டு மனநிலையை கொண்டு வந்தது எனலாம்.இதிலும் மனமாற்றம் மட்டுமே,செயல்படுத்துதல் இன்னும் சரிவர ஆரம்பிக்கவே இல்லை.


நீ நன்றாக படித்தால் உனக்கு அது சோறு போடும்,விளையாட்டு என்ன சோறா போடும்-இது பலத்தரப்பட்ட பெற்றோரின் அன்றுமுதல் இன்றுவரையான நிலையான வாதம்.உண்மை தான் ஆனால் உண்மையான திறமையும் விளையாட்டின்பால் ஈர்ப்பும் கொண்டோரையும் இந்த வாதம் விழுங்கிவிடுகிறது என்பது தான் வேதனையான விஷயம்.அப்படியும் வந்தோர்க்கு வாய்ப்பும்,முறையான பயிற்சியும் உதவியும் கிடைக்கவிடாமல் செய்வது வேறென்னவாக இருக்கமுடியும் பாழாய்ப்ப்போன சாக்கடை அரசியல் தான்.




சமீபத்தில் காமென்வெல்த் போட்டிகளை மையமாக்கி என்.டி.டி.வியில் ஒரு கலந்துரையாடலைப் பார்த்தேன்.நிகழ்ச்சியின் சூடான விவாதத்தின் மையத்தில் நிகழ்ச்சித்தொகுப்பாளர் எதிர்பாராத ஒரு கேள்விக்கணையை தொடுத்தார்.நடுத்தர மற்றும் மேல்தர வகுப்பு வர்க்கத்தினரை போன்றோர் இருந்த பங்கேற்பாளர்களில் விளையாட்டை முழுநேரப் பணியாய் கொண்டவர் எவரேனும் உண்டா? என்று.நீங்கள் என்ன யூகிக்கிறீர்கள்.? உண்மை தான், கூச்சல் எல்லாம் அடங்கி அமைதி தான் நிலவியது.ஒருத்தரும் இல்லை.இதுதான் நம்நிலை.


அதற்கு நம்மக்கள் தான் காரணம் என்று ஒதுக்கிவிட முடியாது.110 கோடி மக்களில் பெரும் யுவ,யுவதிகளைக் கொண்டிருக்கும் சமூகமாயிருந்தாலும் அதன் சக்தி விரயமாகிக் கொண்டிருப்பதற்கு உதவிக்கான ஸ்பான்சர்களும்,மீடியாவும் சாக்கடையுடன் போட்டியிடுகிறது என்பதே என் வாதம்.கிரிக்கெட்டும் சானியாவும் தவிர எதுவும் சரிவர தென்படவில்லை ஸ்பான்சர்களுக்கும்,மீடியாவுக்கும்.காமென்வெல்த் ஊழலிலும், விளையாட்டு கிராமத்திலுள்ள குளறுபடிக்கும்,எயிட்ஸ் பாதுகாப்புக்கவச அடைப்புக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை விளையாட்டை இந்தியாவின் சார்பில் முன்னிறுத்தும் செயல்பாட்டில் மீடியா முனைப்பை  காட்டத்தவறியது.


முதன்முறையாக இந்த வளர்ந்துவரும் தேசம் நடத்தும் ஒரு பெரும்போட்டியை டிடி ஸ்போர்ட்ஸ் மற்றும் டிடி தவிர யாரும் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.இவ்வளவு செலவு செய்து இதெல்லாம் நமக்குத் தேவையா என்பதும் ஊழல் தலைவிரிக்கோலமும் சரியென்று ஒப்புக்கொள்ள முடியாததும்,விவாதத்திற்கும் உரியவை.நம்நாடு நடத்தும் சிறப்பைப் பெற்ற இந்த நிகழ்வை நல்லுணர்வோடும்,நம்பிக்கையோடும் அடித்தட்டு மக்களுக்கு இப்போது கொண்டு சேர்க்காமல் எப்போது கொண்டு சேர்ப்போம்.? ஸ்பான்சர்களும் கிரிக்கெட்டிற்கு போல பெரிய வரிசையெல்லாம் இல்லை என்பதை காமென்வெல்த்தின் அதிகாரப்பூர்வ தளத்தை பார்வையிட்டால் புரியும்.


இவற்றையெல்லாம் தாண்டி நாம் பதக்கப்பட்டியலில் இரண்டாவது அல்லது மூன்றாம் இடத்திற்கு தாவிக்கொண்டு இருப்பது உவப்பாய் இருக்கிறது.ஆஸ்திரேலியாவை தங்கங்களில் முந்தாவிட்டாலும் 2-0 என கிரிக்கெட்டில் வெண்தோய்ப்பாக்கி (whitewash-ன் தமிழாக்கம் சரியா?? பின்னூட்டவும் தவறெனில்) இருப்பதும் உவப்பே..சோனியாவும் ராகுலும் போட்டியைக் காண வந்திருந்ததில் அரசியல் சார்பு  விடுத்து ஊக்குவித்ததும் நல்லதே..இந்த மகிழ்வில் விளையாட்டில் நம்மக்களுக்கு ஊக்கமும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில்,நினைப்பில்..நான்.

2 comments:

கானகம் said...

அட, அருமையாய் எழுத ஆரம்பித்து விட்டீர்கள்.. ஆரம்பமே அசத்தலான இடுகைகளால் பொலிவாய் இருக்கிறது. போஸ்ட் இடும்போது ஜஸ்டிஃபை செய்ய வேண்டாம்.

S B Ravi said...

என்னடா தம்பி, மறுபடியும் உன்னுடைய லீலைகளை ஆரம்பித்து விட்டாயா? வாழ்த்துக்கள்.....