Tuesday 12 October 2010

மனுஷ்ய புத்திரன் கவிதையும் விஜயகாந்தும்

சமீபத்தில் சாருவின் வலைதளத்தில் மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்று வாசிக்கக் கிடைத்தது..கவிதை நன்றாகவே இருப்பதாய் மனதில் கீற்றிற்று.அந்த கவிதை இங்கே:


மன்னிப்பு என்பது

மன்னிப்பு கேட்கும்படி
அப்புவுக்கு நான் கற்பித்த நாளில்
மன்னிப்பு என்றால்
என்னவென்று கேட்கிறான்

ஒரு குழந்தைக்குப்
புரியவைக்க முடியுமா

மன்னிப்பு என்பது
ஒரு குற்றத்திற்கு வழங்கப்படும்
அதிகபட்ச தண்டனையென்று

அது வலிமையுள்ளவர்கள்
வலிமையற்றவர்கள்மேல் செலுத்தும்
அதிகாரம் என்று

வலிமையற்றவர்கள்
தமது இயலாமைக்குத்
தாமே வழங்கிக் கொள்ளும்
சமாதானமென்று

கடவுள்களின் ஓய்வு நேரப்
பொழுது போக்கு என்று

பந்தயத்தில் தோற்ற குதிரையை
உயிரோடுவிடுவது என்று

மரண தண்டனைக் குற்றவாளிக்குத்
தூக்கு மேடையில் வழங்கப்படும்
கருணை என்று

ஒரு முடிவற்ற துன்பத்திற்கு
நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்வது என்று

எளிய தேவைகளுக்காக செய்துகொள்ளும்
சமூக உடன்படிக்கை என்று

கன்னத்தில் அறைந்தவர்களுக்கு
மறுகன்னத்தைக் காட்டுவது என்று

படுக்கையறையில்
மண்டியிடுதல் என்று

ஒரு இந்தியன் கண்டுபிடித்த
வினோத தத்துவம் என்று

பிரார்த்தனைகளின்
மையப் பொருள் என்று

ஒரு புரட்சியாளனால்
உதாசீனப்படுத்தப்படுவது என்று

இன்னொரு சந்தர்ப்பம்
அளிக்கும் முயற்சி என்று

இன்னொரு பக்கத்தைப்
புரிந்துகொள்வது என்று

தண்டனையை
ஒத்தி வைப்பது என்று

நண்பர்களுக்குத் தரும்
சிறந்த பரிசு என்று

ஒரு துரோகத்தை
அறியாததுபோல் நடிப்பது என்று

எந்தத் தவறும் செய்யாத போதும்கூட
கேட்கப்படுவது என்று

பெரும்பாலான சமயங்களில்
மறுக்கப்படுவது என்று

ஒருவரை அச்சத்திலிருந்து
விடுவிப்பது என்று

ஒருவரை நிரந்தரமாக
அடிமைப்படுத்துவது என்று

மறதியின்
இன்னொரு பெயர் என்று

அடிக்கடி பயன்படுத்தப்படும்
ஒரு அர்த்தமற்ற சொல் என்று

மிகவும் எளிய
ஒரு தந்திரமென்று

ஒரு போதைப்பொருள்
என்று

மன்னிக்கவே முடியாத ஒன்றை
மன்னிப்பது போல் பாவனை செய்வது என்று

ஒரு குழந்தைக்குப்
புரியவைக்க முடியுமா

மன்னிப்பு என்பது
இறுதியில்
ஒரு கண்ணீர்த்துளி
மட்டுமே என்று..”


கவிதையின் பல வரிகள் இறுதியின் கண்ணீர்த்துளிக்கு வழிவிட்டன.ஆழ்ந்த கவிதை ஞானமில்லாத எனக்கு இதன் கட்டுமானம் சிறிது நீளமாய் போனதில் கொஞ்சம் வருத்தம்.சுருங்க,நறுக்க(!!!) படித்தே பழக்கப்பட்டுப் போன எனக்கு ஏனோ விஜயகாந்த் இந்த இடத்தில் நினைவுத்திரையில் சிவந்த கண்களுடன் நீண்ட வசனம் பேசிய பிரம்மை.

தமிழில் விஜயகாந்த்துக்கு பிடிக்காத
ஒற்றை வார்த்தை என்று

இதையும் சேர்த்திருக்கலாம் என தோன்றிற்று.விஜயகாந்த்தை பகடி செய்யவே இதை பதிகிறேன்,மனுஷ்யபுத்திரனை அல்ல என்பதை தெளிவாக்கிட விழைகிறேன்.காட்சிப்பிழையாய் தவறுதலாய் புரிதல் நேர்ந்தாலும் கவிதை(தலைப்பு) எழுதிய அவர், தரவும் செய்வார் என்ற நம்பிக்கையில்...

2 comments:

கானகம் said...

நல்ல கவிதை...

//மன்னிப்பு என்பது
ஒரு குற்றத்திற்கு வழங்கப்படும்
அதிகபட்ச தண்டனையென்று//

இது உச்சம், என்னைப் பொருத்தவரை...

சர்பத் said...

நல்ல பதிவு/பகிர்வு